Sunday 2 September 2018

ஏன் சென்றீர்கள் கோக்ஷ்?

அபர்ணா செனின் படங்கள் தேடிப் பார்த்துக்கொண்டிருந்த நாட்களில் இயக்குனர் ரிதுபர்னோ கோக்ஷ் படங்கள் அறிமுகமானது. Unishe April-ல் ஆரம்பித்து அவரது படங்கள் மனதுக்குள் தொடர்ந்து ஒரு உரையாடலை, விவாதத்தை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது.
மனிதர்களின் அகவுலகை மிக சரியாக, இயல்பாக சொல்லியவர்களில் முக்கியமானவர் கோக்ஷ். அவரது படங்கள் நகரத்து பெண்களின் அதிகம் பேசாப்படாத உளச்சிக்கல்களை பேசுபவை. அவரது பெண் கதாபாத்திரங்கள் அம்மா, அக்கா, தோழியாகவும் பல சமயங்களில் நானாகவும் உணர்ந்து கொள்ளுமளவு யதார்த்தமானவை.
மூன்றாம் பாலினத்தவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்களின் (LGBT) உறவுகளை, உணர்வுகளை புரிந்துகொள்வதற்கான தொடக்கத்தை ரிதுபர்னோ கோக்ஷ் நடித்த படங்கள் ஏற்படுத்தின. 
ஒரு படம் பார்த்து முடிந்ததும் அது உண்டாக்கிய கேள்விகள், ஏற்கனவே உள்ள விமர்சனங்கள், அதற்கு கோக்ஷின் பதில்கள் என தேடி வாசித்து அடுத்த படத்திற்கு செல்வதற்குள் சில நாட்கள் ஆகும். அந்த நாட்கள் வேறு ஒரு உணர்வுப்பூர்வமான உலகத்தில் அற்புதமான மனிதர்களுடன் வாழச் செய்தது. 
சஞ்சய் நாக் இயக்கிய 'மெம்மரீஸ் இன் மார்ச்' படத்தில் கோக்ஷின் கதாபாத்திரம் நடிப்பு என்று சொல்ல முடியாது. காதலர்மீது அன்பு செலுத்தும் காட்சிகள் கோக்ஷ் தன் சக மனிதர்களிடத்தில் கொண்ட அளவு கடந்த அன்பின் வெளிப்பாடு.
                                        

தன்னை ஓரினச் சேர்க்கையாளராக வெளி உலகிற்கு அறிவித்துக் கொண்டவர். Arekti Premer Golpo என்ற படத்தில் மாற்று பாலினத்தவராக நடிக்க வேண்டி மார்பக அறுவைச் சிகிச்சை செய்துக் கொள்ளும் அளவு சினிமா எனும் கலையை காதலித்த கலைஞன்.    
சினிமாவின் இலக்கணம், தொழில்நுட்ப அறிவு எதுபற்றியும் தெரியாத எனக்கு மாற்று சினிமா மீதும், பிற மொழிப் படங்கள் மீதும் ஈர்ப்பை ஏற்படுத்தியவர் கோக்ஷ்.
ரிதுபர்னோ கோக்ஷ் மரணத்தை எனது தனிப்பட்ட இழப்பாகவே கருதுமளவு அவர் இயக்கிய, நடித்த படங்கள் மூலம் அவரை நேசிக்கிறேன். 
ஆகஸ்ட் 31 அவரது பிறந்தாளை ஒட்டி வெளியான ஒரு கட்டுரையை அவரை பிடிக்கும் என்று என்றோ சொன்னதை மனதில் வைத்து ஒரு தோழி அனுப்பி இருக்கிறார். பல நினைவுகளையும் அழுகையும் உண்டாக்கிய அந்த கட்டுரை இது :-https://www.filmcompanion.in/rituparno-ghosh-birth-anniversary-bengali-cinema/amp/

No comments:

Post a Comment